Thursday, January 13, 2011

ஆலய நுழைய தயாராகும் உத்தப்புரம் தலித் மக்கள்!

உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் ஆலய நுழைவுப் போராட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

உத்தப்புரத்தில் இருந்த தீண்டாமைச்சுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றின் தொடர் போராட்டங்களின் காரணமாக தமிழக அரசு அதில் ஒரு பகுதியை இடித்து பொதுப்பாதையை ஏற்படுத்தியது. திறந்து விட்ட பொதுப்பாதையில் தலித் மக்கள் சென்றுவருவதில் இன்றைக்கும் பிரச்சனை உள்ளது. தவிர பேருந்து நிழற்குடை அமைப்பது, தலித் மக்களை முத்தாலம்மன் கோவிலுக்குள் அனுமதிப்பது போன்ற பிரச்சனைகளுக்கு தமிழக அரசு இன்னும் தீர்வுகாணவில்லை.

இந்நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஜனவரி 31ம் தேதி உத்தப்புரம் முத்தாலம்மன் கோவிலில் ஆலய நுழைவுப் போராட் டத்தை நடத்த உள்ளது. இதற்கான தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உத்தப்புரத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற ஊர்க்கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தலித்மக்கள் கலந்துகொண் டனர். அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், மாநிலச் செயலாளர் எஸ்.கே. பொன்னுத்தாய், மாநிலக்குழு உறுப்பினர் சங்கரலிங்கம், மாவட்ட அமைப்பாளர் எம். தங்கராஜ், பொன் னையா, நாட்டாண்மைகள் முத்துராஜ், பெரியசாமி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தேவராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் முத்துராணி ஆகியோர் போராட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினர்.

ஆலய நுழைவுப்போராட்டத்தை விளக்கி ஜனவரி 21ம் தேதி மதுரையிலும், 26ம் தேதி சென்னையிலும் சிறப்புக் கருத்தரங்கங்கள் நடைபெறுகிறது. 


Sunday, January 9, 2011

9 ஆம் வகுப்பு வரலாறு - கேள்விகளும், பதில்களும்

1. சிந்து சமவெளி மக்கள் வணிகத்தொடர்பு கொண்டிருந்த நாடு
அ) ரஷ்யா ஆ) சீனா இ)ஸ்பெயின் ஈ) எகிப்து

2. மொகஞ்சதாரோ உள்ள இடம்
அ) சிந்து ஆ) பஞ்சாப் இ) குஜராத் ஈ) ராஜஸ்தான்

3. கீழ்க்கண்டவற்றிற்கு சரியான விடைகள் எந்த தொகுதியில் உள்ளன?
1. செம்பு கற்காலம்  - 1. கோட்டை
2. காலிபங்கன்  - 2. குஜராத்
3. லோத்தல்   - 3. ஹரப்பா பண்பாடு
4. சிட்பாடல் 4. ராஜஸ்தான்

அ) 2,4,1,3 ஆ) 4,3,2,1 இ) 4,3,1,2 ஈ) 4,2,3,1

4. பின் வேதகாலம் என பொதுவாகக் கருதப்படும் காலம்
அ) கி.மு. 2000 முதல் கி.மு. 1000 வரை
ஆ) கி.மு. 3000 முதல் கி.மு. 2000 வரை
இ) கி.மு.1000 முதல் கி.மு. 600 வரை
ஈ) கி.மு.500 முதல் கி.மு. 200 வரை

5. ருவி என்னும் ஆடையானது
அ) இடுப்பில் அணிவது ஆ) கழுத்தைச் சுற்றி அணிவது இ) உடல் முழுவதும் மறைக்க அணிவது ஈ) மேற்கண்ட எதுவுமில்லை.

6. முன்வேதகாலத்தைப் பற்றி அறிய உதவுவது
அ) இதிகாசங்கள் ஆ) உபநிடதங்கள் இ) ரிக்வேதம் ஈ) ஆரண்யகங்கள்

7. அஸ்தேயம் என்பது
அ) உண்மை பேசுதல் ஆ) திருடாமை இ) கொல்லாமை ஈ) நல்லொழுக்க வாழ்க்கை வாழ்தல்

8. மகாவீரர் தன் கொள்கைகளைப் போதித்த மொழி
அ) பாலி ஆ) பிராக்கிருதம் இ) சமஸ்கிருதம் ஈ) பாரசீகம்

9. புத்தர் தன் சமயக்கொள்கைகளை முதன்முதலாக பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்த இடம்
அ) காஞ்சி ஆ) சாரநாத் இ) கயா ஈ) வைசாலி

10. முதல் புத்தசமய மாநாட்டினைக் கூட்டியவர்
அ) அஜாதசத்ரு ஆ) பிம்பிசாரர் இ) அசோகர் ஈ) தனநந்தர்

11. அலெக்சாண்டரிடம் சரணடைந்த முதல் இந்திய மன்னர்
அ) போரசு ஆ) அம்பி இ) சந்திரகுப்தர் ஈ) சங்கள மன்னர்

12. செலகஸ் நிகேடரைத் தோற்கடித்தவர்
அ) அலெக்சாண்டர் ஆ) போரசு இ) சந்திரகுப்தர் ஈ)அம்பி

13. அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர்
அ)மெகஸ்தனிஸ் ஆ) சாணக்கியர் இ) விசாகதத்தர் ஈ) அசோகர்.

14. தன் போதனைகளைப் பரப்ப அசோகர் பயன்படுத்திய மொழி
அ) சமஸ்கிருதம் ஆ) பாலி இ) இந்தி ஈ) பிராக்கிருதம்

15. மௌரியர்களின் கடைசி அரசர்
அ) சந்திரகுப்தர் ஆ) அசோகர் இ) பிரகத்ரதர் ஈ) மகேந்திரன்

16. அக்னிமித்திரனைத் தலைவனாகக் கொண்டு காளிதாசர் இயற்றிய நூல்
அ) சாகுந்தலம் ஆ) மாளவிகாக்னிமித்திரம் இ) மேகதூதம் ஈ) இரகு வம்சம்

17. குஷான மரபினைத் தோற்றுவித்தவர்
அ) வீமாகாட்பீசசு ஆ) குஜலாகாட்பீசசு இ) கனிஷ்கர் ஈ) அசுவகோசர்

18. அசுவகோசர் எழுதிய நூல்
அ) புத்தசரிதம் ஆ)மகாவிபாஷம் இ) மத்தியமிகச் சூத்திரம் ஈ) அசுவகோசம்

19. இரண்டாம் சந்திரகுப்தருக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர்
அ)குமார குப்தர் ஆ) ஸ்கந்தகுப்தர் இ) முதலாம் சமுத்திரகுப்தர் ஈ)யூணர்கள்

20. குப்தர்களின் அரசவை மொழி
அ) சமஸ்கிருதம் ஆ) பாலி இ) பிராக்கிருதம் ஈ) தமிழ்

21. உலகம் உருண்டை வடிவமானது என்று நிரூபித்தவர்
அ) வராகமிகிரர் ஆ) ஆரியபட்டர் இ) பிரம்மகுப்தர் ஈ) வராகபட்டர்

22. ஹர்சரின் தலைநகர்
அ) கன்னோசி ஆ) பாடலிபுத்திரம் இ) காஞ்சி ஈ) மாளவம்

23. முதலாம் மகேந்திரவர்மனைத் தோற்கடித்தவர்
அ) முதலாம் புலிகேசி ஆ) இரண்டாம் புலிகேசி இ) ஹர்சர் ஈ)குமாரகுப்தர்

24. சரியான விடைகளைத் தெரிவு செய்க.
1. நாலந்தா -1. புனிதப்பயணிகளின் இளவரசர்
2. சியூக்கி   -2. கல்வி மையம்
3. மத்தவிலாசப்பிரகாசனம் -3. மேற்கு நாடுகளின் குறிப்பு
4. யுவான்சுவாங் -4.முதலாம் மகேந்திரவர்மன்
அ) 4,1,2,3 ஆ) 4,1,3,2 இ) 2,4,3,1 ஈ) 2,1,4,3

25. முதல் தரெயின் போர் நடந்த ஆண்டு
அ)கி.பி.1194 ஆ) கி.பி.1191 இ) கி.பி.1193 ஈ) கி.பி.1195

26. சந்தேல மரபின் கடைசி அரசனைத் தோற்கடித்தவர்
அ)கஜினி மாமூத் ஆ) கோரி முகமது இ) குத்புதீன் ஐபக் ஈ) சபக்டிஜின்

27. சமணக்கோவில் தில்வாரா அமைந்துள்ள இடம்
அ) ஆக்ரா ஆ) டெல்லி இ) அபுமலை ஈ) கஜூராஹோ

28. அலாவுதீன் கில்ஜி இரன்தாம்பூரைக் கைப்பற்றிய ஆண்டு
அ) கி.பி. 1351 ஆ) கி.பி.1301 இ) கி.பி.1321 ஈ) கி.பி.1311

29. சித்தூர் ராணி பத்மினியின் கணவர்
அ) பீம்சிங் ஆ) ராணா ராம்தேவ் இ) பல்வீர்சிங் ஈ) ராம்சிங்

30. அடிமைகளின் மேம்பாட்டிற்காகத் தனி அமைப்பைத் தோற்றுவி த்தவர்
அ)பெரோஸ் துக்ளக் ஆ) முகமதுபின் துக்ளக் இ) அலாவுதீன் கில்ஜி ஈ) மாலிக்காபூர்

31, இராமானுஜரின் சீடர்
அ) கபீர் ஆ) மீராபாய் இ) இராமானந்தர் ஈ) துளசிதாஸ்

32. நாமதேவரின் பாடல்கள் எழுதப்பட்ட மொழி
அ) தமிழ் ஆ) வங்காளம் இ) தெலுங்கு ஈ) மராத்தி

33. ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுத்தவர்
அ) நாதமுனி ஆ) கம்பர் இ) நம்பியாண்டார் ஈ) ஆண்டாள்

34. பாமினி அரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
அ)கி.பி.1347 ஆ) கி.பி. 1337 இ) கி.பி.1314 ஈ) கி.பி.1342

35. பாமினி சுல்தான்கள் ஆதரித்த மொழி
அ) இந்தி ஆ) உருது இ) தெலுங்கு ஈ) கன்னடம்

36. கிருஷ்ணதேவராயரின் மரபு
அ)சங்கம மரபு ஆ) சாளுவ மரபு இ) துளுவ மரபு ஈ) அரவீடு மரபு

37.  முதலாம் பானிபட் போர் நிகழ்ந்த ஆண்டு
அ) கி.பி.1556 ஆ) கி.பி.1256 இ) கி.பி.1562 ஈ) கி.பி.1526

38. அக்பரின் வருவாய் அமைச்சர்
அ) ராஜா மான்சிங் ஆ) ராஜா தோடர்மால் இ) தான்சென் ஈ) ராஜா பகவன்தாஸ்

39. பத்தாவது சீக்கிய குருவின் பெயர்
அ) குரு கோவிந்தசிங் ஆ) குரு அர்ஜூன்சிங் இ) குருநானக் ஈ) குரு பல்வீர்சிங்.

40. ஜஹாங்கீர் காலத்தில் அறிமுகப்படுத்திய ஒரு பயிர்
அ) கோதுமை ஆ) அரிசி இ) புகையிலை ஈ) தானியம்

41. பாபர் வல்லவராகத் திகழ்ந்த கலை
அ) வரைகலை ஆ) ஓவியம் இ) இசைக்கலை ஈ) நாட்டியம்

42. சரியான விடைகளைத் தெரிவு செய்க
1. சூரத் - 1. மஸ்லீன் துணி
2. திவானி அம் - 2. துறைமுகம்
3, தாரா சுகோ - 3. அக்பரின் அலுவலகம்
4, சோனார்கான் - 4. முகலாய இளவரசர்
அ) 3,4,1,2 ஆ) 3,4,2,1 இ) 4,3,2,1 ஈ) 4,1,2,3

43. வாஸ்கோடகாமா கோழிக்கோடு பகுதியில் இறங்க அனுமதி அளித்த  அரசர்
அ) பீஜப்பூர் சுல்தான் ஆ) விசயநகர அரசர் இ) மன்னர் சாமரின் ஈ) சந்திரநாகூரின் மன்னர்

44. வில்லியம் ஹாக்கின்ஸ் ஒரு
அ) ஆசிரியர் ஆ) வியாபாரி இ) மருத்துவர் ஈ) படைவீரர்

45. பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு
அ) 1757 ஆ) 1764 இ) 1765 ஈ) 1771

46. பக்சார் போரில் இந்திய மன்னர்களைத் தோற்கடித்த ஆங்கில ஆளுநர்
அ) கர்னல் ஸ்மித் ஆ) மேஜர் மன்றோ இ) கிளைவ் பிரபு ஈ) அட்மிரல் வாட்சன்

47. இந்தியப் பெரும் புரட்சியின்போது இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தவர்
அ) வெல்லெஸ்லி ஆ) டல்ஹெளசி இ) கானிங் ஈ) கிளைவ்

48. இராணி லட்சுமிபாய் புரட்சியில் ஈடுபட்ட இடம்
அ) கான்பூர் ஆ) மத்திய இந்தியா இ) லக்னோ ஈ) டெல்லி

49. பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர்
அ) தயானந்த சரஸ்வதி ஆ) இராம்மோகன்ராய் இ) அன்னிபெசன்ட் ஈ) விவேகானந்தர்

50. பிரம்மஞானசபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
அ) சென்னை ஆ) மும்பை இ) டெல்லி ஈ) கொல்கத்தா

51, இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அறிமுகப்படுத்தியவர்
அ) லிட்டர் பிரபு ஆ) ரிப்பன் பிரபு இ) கர்சன் பிரபு ஈ) கிளைவ் பிரபு

52. வங்காளப் பிரிவினை நடந்த ஆண்டு
அ) 1911 ஆ) 1912 இ) 1910 ஈ) 1905

53. ரௌலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
அ) 1919 ஆ) 1917 இ) 1918 ஈ) 1921

54. ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குப்பின் இரவீந்திரநாத் தாகூர் துறந்த பட்டம்
அ) தலைவர் ஆ) நைட்வுட் இ) பிரபு ஈ) அரசர்

55. பூமிதான இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
அ) 1960 ஆ) 1950 இ) 1952 ஈ) 1951

56. ஐந்தாண்டுத்திட்டத்தினை வகுப்பது
அ) திட்டக்குழு ஆ) தேசிய வளர்ச்சிக்குழு இ) அணுசக்திக்குழு ஈ) பிரதமரின் அலுவலகம்

57. நேரு அரசு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கை
அ) தனியார் மயம் ஆ) தாராளமயம் இ) கலப்புப் பொருளாதாரம் ஈ) உலகமயம்

58. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்
அ) பெங்களுர் ஆ) புதுடெல்லி இ) ஐதராபாத் ஈ) சென்னை

59. பொருத்துக
1. எச்.ஜே.பாபா  - 1. உத்தரப்பிரதேசம்
2. எஸ்.எஸ்.பட்நாகர் - 2. டி.எஸ்.ஓ
3. டி.எஸ்.கோத்தாரி - 3. ராஜஸ்தான்
4. கோடா   - 4. சி.எஸ்.ஐ.ஆர்
5. நரோரா   - 5. டி.ஏ.இ
அ) 5,2,1,3,4 ஆ) 5,2,3,1,4 இ) 4,2,5,3,1 ஈ) 5,3,4,2,1

60. முதல் அணிசேரா இயக்க மாநாடு நடைபெற்ற இடம்
அ) கெய்ரோ ஆ) டாக்கா இ) பெல்கிரேடு ஈ) ஜாகர்த்தா

61. சார்க் அமைப்பின் தலைமையிடம்
அ) டாக்கா ஆ) காத்மண்டு இ) மாலே ஈ) புதுடெல்லி

62. முதன்முதலில் இந்தியாவிற்கு கடல்வழியைக் கண்டுபிடித்த ஐரோப்பியர்கள்
அ) டேனியர்கள் ஆ) பிரெஞ்சுக்காரர்கள் இ) போர்ச்சுக்கீசியர்கள் ஈ) ஆங்கிலேயர்கள்

63.  தமிழ்நாட்டில் பாளையக்காரர்முறை தோன்றியது
அ) சோழர் காலத்தில் ஆ) பாண்டியர் காலத்தில் இ) பல்லவர் காலத்தில் ஈ) விசயநகரப் பேரரசர் காலத்தில்

64.  தமிழகத்தில் ஆங்கிலேயரை முதன்முதலில் எதிர்த்தவர்
அ) புலித்தேவர் ஆ) வீரபாண்டிய கட்டபொம்மன் இ) ஊமைத்துரை ஈ) மருது சகோதரர்கள்

65. வேலூர் கலகம் நடைபெற்ற ஆண்டு
அ) 1799 ஆ) 1801 இ) 1806 ஈ) 1857

66. சரஸ்வதி மகால் என்னும் நூலகம் கட்டப்பட்ட ஆண்டு
அ) 1813 ஆ) 1824 இ) 1857 ஈ) 1882

67. சமரச சுத்தசன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்தவர்
அ) பெரியார் ஆ) வள்ளலார் இ) டாக்டர்.முத்துலட்சுமிரெட்டி ஈ) டி.எம்.நாயர்

68. பிராமணரல்லாதவர்க்கு என்று தனி விடுதியை சென்னையில் அமைத்தவர்
அ) தியாகராய செட்டியார் ஆ) சி.நடேசன் இ) சுப்பராயலு ஈ) டி.எம்.நாயர்.

69. தமிழகக் கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1980 ஆ) 1970 இ) 1991 ஈ) 1978

70. தமிழ்நாடு மின்சார வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு
அ) 1978 ஆ) 1957 இ) 1948 ஈ) 1984

71. முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1979 ஆ) 1989 இ) 1990 ஈ) 2002

72. முதியோர் மாத ஓய்வூதியத்திட்டத்தில் வழங்கப்படும் தொகை
அ) 500 ஆ) 300 இ) 250 ஈ) 400

73. அகரமுதலி என்ற சொற்களஞ்சியத்தை எழுதியவர்
அ) ஒளவை துரைசாமிப்பிள்ளை ஆ) தேவநேயப் பாவாணர் இ) நமச்சிவாய முதலியார் ஈ) டாக்டர். மு.வரதராசனார்

74. சாண்டியல்யன் எழுதிய வரலாற்றுப்புதினம்
அ) கடல்புறா ஆ) வேலைக்காரி இ) சந்திரகாந்தா ஈ) குடும்ப விளக்கு

75. தமிழ்நாடகத்தின் தந்தை என்று போற்றப்பட்டவர்
அ) மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை ஆ) டி.கே.எஸ்.சகோதரர்கள் இ) சூரியநாராயண சாஸ்திரி ஈ) பம்மல் சம்பந்தம் முதலியார்.


76. புதுடெல்லியின் வரலாற்றுப்பெயர் என்ன?
அ) குருசேத்திரம் ஆ) ஜனக்புரி இ) சாணக்கியபுரி ஈ) இந்திரப்பிரஸ்தம்

77. சீன-இந்தியப் போர் நடைபெற்ற ஆண்டு எது?
அ) 1962 ஆ) 1965 இ) 1971 ஈ) 1961

78. பம்பாயைத் திருமணப் பரிசாகப் பெற்ற இரண்டாம் சார்ல° மணந்த இளவரசியின் நாடு
அ) பிரான்சு ஆ) ஸ்பெயின் இ) இங்கிலாந்து ஈ) போர்ச்சுகல்

79. வரதட்சணைத்தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
அ) 1961 ஆ) 1960 இ) 1962 ஈ) 1963

80. தமிழ்நாட்டில் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டின் அளவு
அ) 30 விழுக்காடு ஆ) 33 விழுக்காடு இ) 50 விழுக்காடு ஈ) 25 விழுக்காடு

81. முதல் கர்நாடகப்போரை முடிவிற்குக் கொண்டு வந்த உடன்படிக்கை
அ) அய்.லா.சாப்பேல் ஆ) பாண்டிச்சேரி இ) பாரிஸ் ஈ) அலகாபாத்

82. ஆற்காட்டு வீரர் என அழைக்கப்பட்டவர்
அ) டியூப்ளே ஆ) கவுண்ட்-டி-லாலி இ) புஸ்ஸி ஈ) ராபர்ட் கிளைவ்

83. சிவகங்கைச் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர்
அ) பெரிய மருது ஆ) சின்ன மருது இ) பூலித்தேவன் ஈ) வீரபாண்டிய கட்டபொம்மன்

84. தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் ரயில்வே நிலையம்
அ) திருவல்லிக்கேணி ஆ) பேசின்பிரிட்ஜ் இ) எழும்பூர் ஈ) இராயபுரம்

85. வீரமாமுனிவரின் இயற்பெயர்
அ) ராபர்ட்-டி-நொபிலி ஆ) கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி இ) அருட்தந்தை பெர்னாண்டஸ் ஈ) இக்னேசியஸ் லயோலா.

86. தமிழ்நாட்டில் பொதுக்கல்வி இயக்குநரகம் அமைக்கப்பட்ட ஆண்டு
அ) 1948 ஆ) 1952 இ) 1823 ஈ) 1822

87. சென்னை சட்டக்கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு
அ) 1950 ஆ) 1952 இ) 1929 ஈ) 1891

88. பொதுக்கல்வி இயக்குநரகத்தின் முதல் இயக்குநர்
அ) சர் தாமஸ் மன்றோ ஆ) சார்லஸ் உட் இ) ஏ.ஜே.அர்புத்நாட் ஈ) கன்னிமாரா பிரபு

89. இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர்
அ) ஆலன் ஆக்டேவியன் ஹியூம் ஆ) மகாத்மா காந்தி இ) டபிள்யூ.சி.பானர்ஜி ஈ) தாதாபாய் நைளரோஜி.

90. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர்
அ) திலகர் ஆ) கோகலே இ) காந்திஜி ஈ) படேல்

91. தீவிரவாதிகளுக்கு பயிற்சியளிப்பதற்காக சேரன்மாதேவியில் குருகுலம் நடத்தியவர்
அ) வ.வே.சு.அய்யர் ஆ) வாஞ்சிநாதன் இ) ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஈ கே.காமராஜர்.

92. வேதாரண்யம் உப்புச்சத்தியாக்கிரகத்திற்குத் தலைமை தாங்கியவர்
அ) ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஆ) இராஜகோபாலாச்சாரியார் இ) சர்தார் வேதரத்தினம் பிள்ளை ஈ) சத்தியமூர்த்தி

93. ஈ.வே.ரா. பெரியார் தமிழில் துவக்கிய இதழ்
அ) புரட்சி ஆ) குடியரசு இ) திராவிடன் ஈ) சுதேசமித்திரன்

94. ஈ.வே.ரா.விற்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது
அ) 1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிர° மாநாட்டில்.
ஆ) 1912ல் திருவல்லிக்கேணியில் நடைபெற்ற பிராமணரல்லாதோர் கூட்டத்தில்.
இ) 1938ல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில்.
ஈ) 1924ல் வைக்கம் போராட்டம் நடைபெற்றபோது.

95, தீண்டாமை ஒழிப்புநாள் அனுசரிக்கப்படுவது
அ) சனவரி 26 ஆ) சனவரி 30 இ) ஆகஸ்டு 31 ஈ) செப்டம்பர் 5

96. இந்திய அரசியலமைப்பின் எந்தப்பிரிவு 14 வயதுக்கு உட்பட்ட அனைத்துக்குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக்கல்வி அளிக்க உத்தரவாதம் அளிக்கிறது?
அ) 36வது பிரிவு ஆ) 21வது பிரிவு இ) 45வது பிரிவு ஈ) 10வது பிரிவு

97. தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி அமைந்துள்ள
இடம்
அ) காவலூர் ஆ) கொடைக்கானல் இ) சென்னை ஈ) மகேந்திரகிரி

98. சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு.
அ) 1881 ஆ) 1885 இ) 1882 ஈ) 1857

99. தமிழகத்தின் டெட்ராய்டு என அழைக்கப்படும் நகரம்
அ) கோவை ஆ) ஓசூர் இ) திருச்சி ஈ) சென்னை

100. ஆசியாவிலேயே மிகப்பெரிய வெளியூர் பேருந்து நிலையம் அமைந்துள்ள இடம்
அ) டெல்லி ஆ) கொல்கத்தா இ) மும்பை ஈ) கோயம்பேடு(சென்னை).

"சார்... எனக்கு வேலை கிடைச்சுருச்சு...!"

"சார்... எனக்கு கோ-ஆபரேடிவ் பேங்குல வேல கிடைச்சுருச்சு..." செல்போனில் மகிழ்ச்சிக்கடலில் நீந்திக்கொண்டிருப்பது போன்ற குரல்.

பதில் சொல்வதற்கு முன்பே அந்தக்குரல் தொடர்கிறது. "சார்... நம்ம மையத்துல மேத்ஸ்(கணக்கு) எடுத்ததுதான் சார் ரொம்ப உதவியா இருந்துச்சு..." என்றார் கல்பனா என்ற அந்தப்பெண். கோவையில் அண்மையில் நிரப்பப்பட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் பணியிடங்களில் ஒன்றுதான் அவருக்குக் கிடைத்துள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தால் அட்டவணை சாதியினருக்காக கோவையில் நடத்தப்பட்டு வரும் டாக்டர்.அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தைதான் அவர் குறிப்பிடுகிறார்.

இவர் மட்டுமல்ல. இங்கு நடத்தப்படும் வகுப்புகளால் காவலர் பணிக்கான எழுத்துத்தேர்விலும் மூவர் தேர்வு பெற்றனர். 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதியன்று இந்த மையத்தின் துவக்க விழா நடைபெற்றது. ஜனவரி மாதத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான பயிற்சியைத் துவக்கினோம். ஏப்ரல் இறுதியில் அதற்கான தேர்வு நடைபெற்றது. இந்த வகுப்பு நடந்து கொண்டிருந்தபோதே, இப்போதுதான் எங்களுக்கு இதுபோன்ற வழிகாட்டுதல்கள் கிடைக்கின்றன. ஏதாவது ஒரு வகையில் வகுப்புகள் தொடரட்டும் என்றார்கள் வகுப்புகளுக்கு வந்தவர்கள். இதனால் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பைத் துவங்கினோம்.

தொழில் ரீதியாக இந்த வேலையைச் செய்யும் ஒருவரை அணுகலாம் என்று முடிவெடுத்தோம். திரு.சபாபதி என்பவர் ஆங்கிலத்தில் பேசுவதற்கான வகுப்புகளை நன்றாகச் செய்கிறார் என்று கேள்விப்பட்டு அவரைத் தொடர்பு கொண்டோம். விஷயத்தை விளக்கிவிட்டு உங்களுக்கு எவ்வளவு கட்டணம் தர வேண்டும் என்று கேட்டோம். இவ்வளவு பெரிய பணியை உங்கள் மையம் செய்து வருகிறது. நானும் அதில் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறேன். எனக்கு கட்டணம் எதுவும் வேண்டாம் என்றபோது மையம் பரந்து விரிவடைவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவரது வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

அது நிறைவுபெறும் நேரத்தில் டி.என்.பி.எஸ்.சி. சார்பாக கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ) தேர்வுக்கான விளம்பரம் வந்தது. அதற்கான வகுப்புகள் துவங்கப்பட்டன. தற்போது அதில் இரண்டாம் கட்டத்திற்கான தயாரிப்பில் இறங்கியிருக்கிறது கோவை டாக்டர்.அம்பேத்கர் வேலை வாய்ப்பு பயிற்சி மையம். ஜனவரி 2 ஆம் தேதி முதல் வி.ஏ.ஓ தேர்வுக்காகவும், வரும் காலத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதப் போகிறவர்களுக்காகவும் பயிற்சி வகுப்புகளை நடக்கப்போகிறது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சியால் மதுரை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களிலும் பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன.
பயிற்சி வகுப்புகள் துவங்குகையில் கணிதப் பாடத்திற்கென்று சிறப்பான கவனம் செலுத்துவதென்று முடிவெடுத்தோம். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு பெரிய அளவில் பயன்படாவிட்டாலும் அதைத்தாண்டி மற்ற தேர்வுகளுக்கு கணிதம் அத்தியாவசியம் என்பது நமது ஆசிரியர்களின் கணிப்பாக இருந்தது. அது சரியானது என்பதைத்தான் மையத்தைச் சேர்ந்த கல்பனா கூட்டுறவு வங்கித்தேர்வில் தேர்வு பெற்றது காட்டுகிறது.

அட்டவணை சாதியினர் தங்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் வெகு தூரம் செல்ல வேண்டியிருப்பது போலவே மையத்தின் பணிகளும் வெகு தூரம் செலல வேண்டியிருக்கிறது. அண்மையில் வெளியான காவலர் தேர்வு முடிவுகளில் கட்-ஆப் மதிப்பெண்களில் அட்டவணை சாதியினருக்கான கட்-ஆப் என்பது மற்ற பிரிவினரை விடக் குறைவாக இருந்தது. அட்டவணை சாதியினரிலும், அருந்ததியருக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் மேலும் குறைவாகவே இருந்தது. இட ஒதுக்கீடு மற்றும் உள் ஒதுக்கீடு ஆகியவற்றை இந்த கட்-ஆப் மதிப்பெண்கள் நியாயப்படுத்துகின்றன.

தமிழக அரசுப்பணிகளில் நியாயமான அளவில் இடங்களைப் பெறுவதில் காட்டும் முனைப்பை மத்திய அரசுப்பணிகளும் காட்டிட அட்டவணை சாதியினர் முன்வர வேண்டிய அவசியமுள்ளது. குறிப்பாக, வங்கிப் பணிகளுக்கான தேர்வுகளுக்கும் சரியான வழிகாட்டுதலைப் பெற்று தயார் செய்து கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பதவிகளுக்கு போட்டியிடும் தகுதியை கிராமப்புற அட்டவணை சாதியினரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய தயாரிப்புகளுக்கு டாக்டர்.அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் உதவிடும் வகையில் தயாராக வேண்டிய அவசியம் உள்ளது என்பதை மையத்தின் பொறுப்பாளர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

இதையுணர்ந்தே, போட்டித் தேர்வுகளுக்கு எப்படிப் படிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் ஆலோசனைகளில் துவங்கி, திறன் பெற்ற ஆசிரியர்களால் பயிற்சி, தொடர் மாதிரி தேர்வுகள், தேர்வு எழுதப்போகிறவர்களே வகுப்புகள் எடுப்பது, அவர்களே கேள்விகளைத் தயாரிப்பது என்று திட்டமிட்ட முறையில் மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரம் ஒருமுறைதான் வகுப்பு என்பதால், மற்ற நாட்களில் அவர்களைப் படிக்கச் செய்ய வகையில் குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்) மூலம் ஒவ்வொரு நாளும் மூன்று கேள்விகள் வரை அவர்களுக்கு அனுப்பப்படுகிறது.

தற்போதைய பயிற்சி பிப்ரவரி 20 வரையிலும் நடக்க வாய்ப்புள்ளது. அதற்குப்பிறகு திட்டமிட்டுள்ளபடி வங்கி, எல்.ஐ.சி. போன்ற தேர்வுகளுக்கான பயிற்சிகள் நடத்தப்படும். கோவைப் பயிற்சி மையத்தின் உயிர்நாடியாக கோவைக் கோட்ட காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் இயங்குகிறது. வகுப்புக்கு வருபவர்களின் நேரத்தை மிச்சம் பிடிக்க, சங்கத்தின் செலவில் வகுப்பறைக்கே தேநீர் வருகிறது. கேள்வித்தாள்கள், தேர்வுக்கான பாடக்குறிப்புகள் போன்றவற்றை நகல் எடுப்பதற்காக சங்கத்தின் செலவில் ஒரு ஜெராக்ஸ் மிஷினையே இறக்கிவிட்டார்கள். ஓராண்டு காலம் தொடர்ந்து வகுப்புகள் நடந்திருக்கின்றன என்றால் அதற்கு அகில இந்திய இன்சூரன்ஸ ஊழியர் சங்கத்தின் இத்தகைய அர்ப்பணிப்பு செயல்பாடுகள்தான் காரணம் என்றால் மிகையில்லை.

தோழியர் கல்பனாவின் வெற்றி ஆசிரியர்களையும், வேலைக்காகக் காத்திருப்பவர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. வேலையில் சேர்ந்து விட்டாலும், அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதற்காக வகுப்புகளுக்கு தொடர்ந்து வருவேன் என்று அவர் சொன்னது இந்த மையத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுவதாக இருந்தது.